தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா களைகட்டியுள்ள நிலையில், இறுதிநாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. தென் இந்தியாவில், மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பண்டிகை பிரபலமானதாகும்.
இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் வழக்கம் போல் வேடம் அணிந்து குலசேகரபட்டினம் சுற்றுவட்டார பகுதிகளான சிவலூர், கொட்டாங்காடு, தாண்டவன்காடு, பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்தனர்.
அதன்படி, சிவலூர் பகுதி பக்தர்கள் காமாட்சி, மீனாட்சி, பத்திரகாளி, பீஸ்மர், பரமசிவன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து மேளத்திற்கு ஏற்றபடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வேடமணிந்து முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வந்தால் துன்பம் நீங்கி மகிழ்ச்சியுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்நிலையில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆதி காமாட்சி கோவில் என அழைக்கப்படும் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. நவராத்திரி உற்சவத்தின் 9ம் நாளான இன்று ஆதி காமாட்சி என அழைக்கப்படும் காளிகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆதி காமாட்சி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகா யாக குண்டத்தில் இன்று தசா சண்டி மஹா யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. உலக மக்களை அச்சுறுத்திய கொடிய அரக்கர்களை போரிட்டு அழித்ததைப் போல, தற்போது தலைவிரித்தாடும் கொரோனா எனும் கொடிய அரக்கனை அழித்து உலக மக்களை காத்திட வேண்டியும், உலக மக்களின் நன்மை வேண்டியும் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் அம்மனை வேண்டி தசா சண்டி மஹா யாகம் நடைபெற்றது.
தசா சண்டி மஹா யாகத்தை முன்னிட்டு 1 சிறுமி, மற்றும் 13 சுமங்கலி பெண்களை அம்மனாக பாவித்து அமர வைத்து அவர்களுக்கு பூஜை செய்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பட்டுப்புடவை, மலர்மாலைகள், மற்றும் 1008 வகையான ஹோம திரவியங்கள் உள்ளிட்டவற்றை கொழுந்துவிட்டு எரிந்த,யாக குண்டத்தில் இட்டு தச சண்டி யாகம் நடைபெற்றது. தசா சண்டி யாகத்தை முன்னிட்டு கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளின்படி குறைந்த அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு காளிகாம்பாள் அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி திருவண்ணாமலை மற்றும் ஓசூரில் பொதுமக்கள், தங்களது வீடுகளில் கொலு வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நவராத்திரியை ஒட்டி தலா மூன்று நாட்கள் வீதம், முப்பெரும் தேவிகளான துர்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதியை வழிபடுவது வழக்கம். இதையொட்டி, திருவண்ணாமலை கடம்பராயர் தெருவில் வசித்து வரும் ஆசிரியை கோகிலா, தனது வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடி வருகிறார். இதில், கடவுள்களின் அவதாரங்களை குறிக்கும் வகையில் பல்வேறு கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
Must Read : தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!
புரட்டாசி மாத வளர்பிறையில் தொடங்கி, விஜயதசமி நாளில் நவராத்திரி விழா முடிவடையும். இதில், ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையாகவும், பத்தாவது நாளில் விஜயதசமி தினமாகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இது, கர்நாடகாவில் தசரா என்றும், மேற்கு வங்கத்தில் துர்கை பூஜை எனவும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dussehra