ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, பேரறிவாளனின் மனு முறையாக பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2019ம் ஆண்டு ஆளுநருக்கு அனுப்பிய கருணை மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அதுகுறித்த விவரங்களை கேட்டு மத்திய தகவல் ஆணையத்துக்கு மனு அளித்ததாக கூறியுள்ளார்.
அந்த மனு மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது வரை அந்த மனுவுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வரிசைப்படி பேரறிவாளனின் மனுவை பரிசீலித்து பதில் அளிக்கப்படும் என மாநில தகவல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் விளக்கமளித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானம் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆளுநரின் ஒப்புதலின்றி நளினியை விடுவிக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும், ஆளுநர் ஒப்புதல் இல்லாமலும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் நளினி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Must Read : ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை
இதேபோல, முன் கூட்டி விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கும் மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பிறகு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நளினி விடுதலையாக வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், ஆனால், இதுகுறித்து ஆளுநர்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Nalini, Perarivalan