சாத்தூர் வெடி விபத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் 12 வயது சிறுமி நந்தினியின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - அச்சன்குளம் பகுதியிலுள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி மதியம் கோர வெடி விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 7 மாத கர்ப்பிணி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களோடு சேர்த்து, சூரங்குடியை சேர்ந்த 45 வயதான பாக்கியராஜ் மற்றும் 40 வயதான செல்வி ஆகிய தம்பதியினரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பல்லாண்டுகளாக குழந்தை வரம் வேண்டி தவமிருந்து பெற்ற நந்தினி இன்று கண்ணீரோடு தாய், தந்தையின் உடல்களை பெற உறவினர்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனை பிணவறை முன்பு நின்று கொண்டிருந்தார்.
இந்த கொடும் சோகத்திலும் சற்று ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், வழக்கமாக நந்தினியையும் ஆலைக்கு உடன் அழைத்து செல்பவர்கள் அன்று வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.
ஆலை நிர்வாகம் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததே நந்தினியின் இந்த நிலைமைக்கு காரணம் என்கிறார் நந்தினியின் உறவினர் முத்துக்குட்டி.
நாளொன்றுக்கு 350 ரூபாய் சம்பளத்திற்கு 15 ஆண்டுகளாக பட்டாசு தொழில் ஈடுபட்டு வந்துள்ள நந்தினியின் பெற்றோரின் மரணத்திற்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் அவரது தாய்மாமா ஜெகசாமி.
உறவினர்கள் எப்படிப் பார்த்துக் கொண்டாலும் அது தாய், தந்தைக்கு ஈடாகாது என்று கூறிய ஊரார், இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாய் தந்தையை இழந்து நிர்கதியாய் நிற்கும் சிறுமி நந்தினியின் எதிர்காலம் கருதி அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire accident, Sattur, Sivakasi