விடுதலைப் போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் போர் பயிற்சிக் கூடமாக திகழ்ந்த இடம் தற்போது பராமரிப்பு இல்லாமல் பாலடைந்து காணப்படுகிறது. இதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சங்கரபதி கோட்டை சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சிகள் அனைத்தும் கற்றுக் கொடுத்து சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதருக்கு மணமுடித்து கொடுத்தார். அப்போது கல்யாண சீதனமாகக் கொடுக்கப்பட்டது தான் சங்கரபதி கோட்டை.
50 ஏக்கர் பரப்பளவுள்ள காட்டு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட சதுரடி பரப்பளவில் பிரம்மாண்டமாக சாந்து கலவை கருகல் தூண்கள் மூலம் கோட்டை கட்டப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் போது முதலில் அகழி போன்ற நீச்சல் குளம் மற்றும் ரகசிய அறைகளுடன் கட்டப்பட்டிருந்த கோட்டையிலிருந்து காளையார் கோவில் கோவிலுக்கு சுரங்கப்பாதை இருந்ததாகவும் நாளடைவில் சிதைந்துபோனதாகவும் கூறப்படுகிறது.
இந்த சங்கரபதி கோட்டையில் சுமார் 20 ஆண்டுகள் வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததாகவும் அதோடு யானை ,குதிரையைக் கொண்டு போர் பயிற்சிகளும் நடந்ததாக கூறப்படுகிறது. சிவகங்கையில் இருந்த ஆயுதக் கிடங்குகளை விட இங்குதான் அதிக அளவில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். வீரர்களுக்கு மார்போர் பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கோட்டைப் பகுதியை கண்காணிக்க கோபுரமும் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் மைசூர் மன்னர் ஹதர் அலியுடன் தொண்ட நட்பின் அடையாளமாக தர்காவும் இந்த கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. பல வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த கோட்டை பல வருடங்களாக பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள் எல்லாம் சேதமடைந்து கட்டிடங்களுக்குள் மரம் வளர்ந்து சுற்றி மரங்கள் சூழ்ந்ததால் தற்பொழுது இவ்விடம் அவ்வழியே செல்வோர் பார்வையிலிருந்தும் மறைந்துவிட்டது.
மேலும் படிங்க: மக்கள் கோரிக்கைவைத்தால் சாலையோரங்களில் அரசு சார்பில் ஹோட்டல்கள் -அமைச்சர் ராஜகண்ணப்பன்
மேலும் கோட்டைக்குள் யாரும் செல்ல முடியாமல் வழி இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. நமது சுதந்திரத்தின் போராட்டத்தையும் வரலாற்றையும் தன்னுள் வைத்திருக்கும் இந்தக் கோட்டையைப் புதுப்பித்தால் நமது வரலாற்றை வருங்கால சந்ததியும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே, சங்கரபதி கோட்டையை புதுப்பிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
செய்தியாளர்: முத்துராமலிங்கம்- கரைக்குடிஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.