சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே இடி தாக்கியதில் டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து பிளம்பர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி தனபாக்கியம். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ள நிலையில் பாண்டி பிளம்பர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவர் மூலிகை செடிகள் பறிப்பதற்காக தனது கிராமத்தின் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றுள்ளார்.
இவர் தனது செல்போனை எப்பொழுதுமே வேஷ்டியின் உள்ளே டவுசர் பாக்கேட்டில் வைப்பது வழக்கமாக கொண்டுள்ள நிலையில் திடீரென அவர் மீது இடி தாக்கியுள்ளது. இதில் அவரது டவுசர் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தெரிவித்தனர். அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த 108 ஊழியர்கள் பாண்டி இறந்ததாக தெரிவித்தனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் காவல்துறையினர் மற்றும் தாசில்தார் தலைமையிலான குழுவினர் விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.