சிவகங்கையில் மதுபோதையில் ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அசோக் கோபிநாத் என்ற மாணவன் புது பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்காக தனது கல்லூரி நண்பர்களுக்கு மது பார்ட்டி கொடுத்து சாப்பிடுவதற்கு காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது கணவன்-மனைவி தம்பதியினர் உணவருந்த ஓட்டலுக்கு வந்துள்ளனர்.
கணவர் உள்ளே செல்ல மனைவி வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது புது பைக் பார்ட்டியில் மதுஅருந்திய மாணவன் முகமது சல்மான் கான் மதுபோதையில் தள்ளாடியபடி வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணின் தலையில் வைத்திருந்த பூவை இழுத்து சில்மிஷம் செய்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி நடந்த சம்பவங்களை ஒட்டலுக்கு உள்ளே சென்று கணவனிடம் கூற கணவன் எழுந்து நின்று மனைவியிடம் சில்மிஷம் செய்த மாணவனிடம் ஏதோ கூறியுள்ளார்.
மதுபோதையில் இருந்த முகமதுசல்மான் கான் சில்மிஷம் செய்த பெண்ணின் கணவரை பாய்ந்து அடிக்கவும் கூடியிருந்த சக மாணவர்களும் அந்த பெண்ணின் கணவரை சூழ்ந்துகொண்டு அடித்தனர். இதனை சற்றும் எதிர்பார்காத சப்ளையர்கள் நடந்த சம்பவத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் விலக்கிவிட முயற்சித்தனர் .
பாதிக்கப்பட்ட பெண்ணும் அங்குமிங்கும் ஓட அடிதடி ரகளை நடந்தது. சம்பவம் எல்லாம் முடிந்து தாக்கப்பட்ட பெண்ணின் கணவரும் இது வெளியே தெரிய வேண்டாம் தெரிந்தால் சங்கடமான சூழ்நிலை ஏற்படும் என எந்த பிரச்சினையும் வேண்டாம் போலீசில் புகாரும் வேண்டாமென சென்றுவிட்டார். கடைக்காரரும் பாதிக்கப்பட்டவர்களே வேண்டாம் என நினைக்கும்போது சரி என அவரும் விட்டு விட்டார்.
இந்நிலையில் சண்டை நடந்தபோது இரு மாணவர்களின் செல்போன் சட்டைப்பையில் இருந்து விழுந்துள்ளது. இதை கடை உரிமையாளர் எடுத்து வைத்திருந்தார். எதுவுமே தெரியாதது போல காரைக்குடி அழகாபுரம் காவல்நிலையத்திற்கு சென்ற மாணவர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட போனோம் அங்கு செல்போன் தொலைந்து விட்டது என நினைக்கிறோம் அவர் எடுத்து வைத்திருப்பார் வாங்கித் தாருங்கள் என வாய்மொழியாக கூறியுள்ளனர்.
கடை உரிமையாளரிடம் தொடர்பு கொண்ட காவல்துறையினர் செல்போன் பற்றிய கேட்ட பொழுதுதான் காவல்துறைக்கு ஹோட்டலில் நடந்த ரகளை , அடிதடி சண்டை குறித்து தெரிய வந்துள்ளது. ஹோட்டல் உரிமையாளரிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 மாணவர்களை கைது செய்தனர். மேலும் 7 மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்
செய்தியாளர்: முத்துராமலிங்கம் ( சிவகங்கை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.