கூடங்குளம் அணுக்கழிவு மையத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சென்சார்கள் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அணுமின் நிலைய நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் அமைய உள்ள அணுக்கழிவு மையத்தால் பொதுமக்களுக்கு நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதா என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கூடங்குளம் அணு உலையிலிருந்து அணுக்கழிவுகள் திரவமாகவும், திடப்பொருளாகவும், வாயுப்பொருளாகவும் வெளியாவதாகவும், அவை மிகக்குறைந்த கதிர்வீச்சு தன்மை கொண்டவை என்றும் கூறியுள்ளார்.
அந்த கழிவுகள் உரிய முறையில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் சேமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அணுக்கழிவு சேமிப்பு மையம் குறித்து எந்த அச்சமும் கொள்ள வேண்டியது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலைகளின் நீட்சி மற்றும் அழுத்தம் குறித்து கண்டறியும் சென்சார்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை என்று அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள, "கூடங்குளம் அணு மின் நிலைய பொது விழிப்புணர்வுக் குழுத் தலைவர் ராமதாஸ், அணு உலை செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே கட்டிடத்தின் உறுதியை கண்டறிய சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, சென்சார்கள் இயங்குவது தேவையில்லை என்றபோதிலும், அணு உலைகளின் பல்வேறு இடங்களில் தேவைக்கேற்ப சென்சார்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்சார்கள் செயல்படவில்லை என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது" என்றும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Koodankulam, Nuclear Power plant