தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக இன்று, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழையும் பெய்யுமென கணிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யகூடும். 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
Also Read : ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன? மருத்துவமனை அறிக்கை
இதனிடையே தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூரில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.