திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா குடும்ப உறவினர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா நடராஜன் அதிமுக பொதுச் செயலாளராக்கப்பட்டார். முதலமைச்சராக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் திடீர் தீர்ப்பால், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானதும் லட்சக் கணக்கானவர்கள் திரண்டு, வரவேற்பளித்தனர். அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ( மார்ச் - 17) தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் சசிகலாவின் நடராஜனின் தம்பி பழனிவேலு பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்றார். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோயிலுக்கு வாங்கித் தந்த பேட்டரி காரில், மூலஸ்தானத்தில் மூலவர் பெரிய பெருமாள் , ரங்க நாச்சியார் தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார், இராமானுஜர் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.
வழிபாடு முடித்து ரங்கா ரங்கா கோபுர வாசலுக்கு வந்த சசிகலா, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் புறப்பட்டு சென்றது போது, தியாகத் தலைவி, நிரந்தரப் பொதுச் செயலாளர் வாழ்க என்று அமமுக நிர்வாகிகள் முழக்கமிட்டனர். ஆதரவாளர்கள் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று முழக்கமிட்டாலும், கும்பிட்டு வணங்கியபடி கொடி ஏதும் கட்டாத காரில் சென்றார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் அமமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் மேயர், ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், மாநகராட்சி முன்னாள் கோட்டத் தலைவர் லதா, வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரனின் சகோதரர் உள்ளிட்ட அமமுக பிரமுகர்கள் சந்தித்து பேசினர். நேற்றைய தினம் அமமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர், ஒரத்தநாடு வேட்பாளர் மா.சேகர் சசிகலாவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ககோயிலுக்குள் சசிகலாவைக் கண்ட பலரும் முண்டியடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். பெண்கள், இளைஞர்கள் பலரும் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். காலில் விழ முயன்றவர்களை உடன் இருந்தவர்கள் தடுத்தனர்.