தேச துரோக வழக்கில் குற்றவாளியான வைகோவை மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க அனுமதிக்ககூடாது என சபாநாயகரும், குடியரசுத் துணைதலைவருமான வெங்கய்ய நாயுடுக்கு எம்.பி. சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
சட்டப்படி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரால் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றாலும், தேச விரோத கருத்துகளை பேசும் வைகோவை ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணம் ஏற்பதை அனுமதிக்ககூடாது என்று தனது கடிதத்தில் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிரதமருக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் வைகோ தமிழர் விரோதியாக பிரதமரை சித்தரித்து, தமிழ் சமூகத்தை தவறாக வழிநடுத்துவதாக சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார்.
எந்த குற்றத்திற்காக நீதிமன்றம் தண்டனை விதித்ததோ, அதை பொருட்படுத்தாமல் ஊடகங்களில் தான் தொடர்ந்து அதே செயலை செய்வேன் என்றும் கூறிவருவது நீதித்துறையை அவமதிப்பதாகும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
எனவே, அறநெறிகளுக்கு உட்பட்டு, வைகோ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை நாட்டுக்கு எதிராகவும், நாட்டின் பிரதமருக்கு எதிராகவும் பேசுவோருக்கு தகுந்த பாடமாக அமையட்டும் என்று சசிகலா புஷ்பா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வைகோ தண்டனை
2009-ம் ஆண்டில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு ஒரு ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டுக்கு அவகாசம் வழங்கி தண்டனையை ஒருமாத காலத்திற்கு நீதிமன்றம் நிறுத்திவைத்தது.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினருக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ள வைகோ போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
முன்னதாக வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில், விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற எண்ணத்தைத் தொடர்ந்து இளைஞர்களிடம் விதைத்துக் கொண்டு இருப்பதனால், இந்தத் தண்டனை அளிப்பதாகத் தீர்ப்பில் நீதிபதி எழுதி இருக்கின்றார். ஆம்; விதைப்பேன்; விதைத்துக் கொண்டே இருப்பேன். பேசுவேன்; ஆயுள் தண்டனை என்றாலும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ”நான் பேசியது தேசத்துரோகம் அல்ல; இது தேசத்துரோகம் என்றால், இதை நான் தொடர்ந்து செய்துகொண்டு இருப்பேன்” என்றும் வைகொ குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sasikala Pushpa, Vaiko