சேலம் மாவட்டத்தில், காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும், அவரது மனைவி ஊர் ஊராக சென்று தேடி வருகிறார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவராமன் (வயது 45). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தல், கடிதம் எழுதி கொடுத்தல், உரிய அலுவலர்களை அணுகுவது தொடர்பான ஆலோசனை உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். இதில் குறைந்த வருவாயே கிடைத்து வந்த நிலையிலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இவருக்கு சமீபத்தில் சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டடுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி காலை முத்தம்பட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்கு செல்வதாக சொல்லி சென்ற சிவராமன் வீடு திரும்பவில்லை. தனது கணவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி பழனியம்மாள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார்.
எங்கு தேடியும் கணவர் கிடைக்காததால், காணாமல் போன தனது கணவர் சிவராமனை கண்டுபிடித்து தரும்படி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிவராமனை தேடி வருகின்றனர். ஆனால், சிவராமன் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்தும், தனது கணவர் பற்றிய பதாகையை ஆட்டோவில் ஒட்டியும், ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், கூலித்தொழிலாளியான பழனியம்மாள் தேடி அழைந்து வருகிறார்.
இதையும் படிங்க:வீட்டில் 3 சிலிண்டர்களை திறந்து வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்.. சென்னையில் பரபரப்பு!
பழனியம்மாள், தனியொ
ரு பெண்ணாக ஊர் ஊராக ஆட்டோவில் சென்று, காணாமல் போன தனது கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக உணவு கூட உண்ணாமல், கண்ணீர் மல்க பொதுமக்களிடம் காண்பித்து தேடி வருவது இப்பகுதி மக்களை நெகிழ செய்துள்ளது. அவருக்கு பொதுமக்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.