பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட 5 சவரன் வரையிலான நகை கடனை தகுதி உடையவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனையொட்டி தற்போது பயனாளிகளுக்கு நகைகள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இதனிடையே சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் வைத்திருந்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி லலிதா மற்றும் வாழப்பாடி தாலுகா பெரியகுட்டிமடுவு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவரும் நகை கடன் தள்ளுபடி பெற்று நகையை திருப்பி வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், தங்க நகை, நெக்லஸ் மற்றும் ஆரத்தில் ஆங்காங்கே சிறு, சிறு நகை துண்டுகளை வெட்டி எடுத்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு திரண்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் யோகேஷ் விஷ்ணு பொதுமக்களிடமும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுத்துறை அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிந்து வெளியில் வந்த அதிகாரிகள் இது குறித்து கூறும் போது, தங்க நகையில் சிறு, சிறு பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு, எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
இன்னும் விசாரணை முடியவில்லை. மேலும் இதே போல, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இதே கூட்டுறவு வங்கியில் இது தொடர்பான புகார்கள் வந்ததாக பொதுமக்கள் தெரிவித்ததால், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, முடிவில் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.