காவல்துறையினர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்ததாக கூறி சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சலா ஆகியோரை சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் திருட்டு வழக்கில் கடந்த 10ஆம் தேதி கைது செய்துள்ளனர். தொடர்ந்து 11 ஆம் தேதி பிரபாகரன் நாமக்கல் கிளை சிறையிலும், ஹம்சலா சேலம் மத்திய பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காவல்துறையினர் கடுமையாக தாக்கியதினாலேயே பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி, அவரின் உடலை வாங்க மறுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரபாகரன் உயிரிழப்புக்கு காரணமான சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர காவல் உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.