சேலம் அருகே கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி வெளியில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களிடம் அபராதம் வசூல் செய்த இரண்டு போலி போலீசார் கைது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் மாவட்டம் தம்மம்பட்டி நகர பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முக்கிய சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிசோடி காணப்பட்டது.
Also Read: நான் உதயநிதியின் பி.ஏ.. என்று கூறி இளம்பெண்ணிடம் லட்சங்களை சுருட்டிய மோசடி பேர்வழி கைது
இந்த நிலையில் ஊரடங்கின் போது கொரோனா விதிகளை பின்பற்றாமல் வெளியில் இருசக்கர வாகனத்தில் சுற்றுபவர்களிடம் தம்மம்பட்டி மற்றும் மல்லியகரை காவல் நிலைய எல்லையான மேல் கனவாய்காடு பகுதியில் போலீசார் எனக்கூறி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் கொரோனா விதிகளை மீறி வந்ததாக கூறி அபராதம் விதித்துள்ளனர். அபராத தொகைக்கு பில் போட்டால் 500 ரூபாயும் பில் தேவையில்லை என்றால் 300 ரூபாய் வீதம் வசூல் செய்வதாக தம்மம்பட்டி போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மாறு வேடத்தில் சென்ற போலீசாருக்கே அபராதம் விதித்துள்ளனர்.இதனையடுத்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் தம்மம்பட்டி அருகே உலிபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் சதீஷ் என்பது தெரிய வந்தது. இவர்கள் போலியாக பில் தயாரித்து போலீஸ் எனக்கூறி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா விதிகளை மீறி வெளியில் சுற்றியதாக அபராதம் விதித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
Also Read: காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு சித்ரவதை.. பொள்ளாச்சி நடந்த அதிர்ச்சி சம்பவம்
இதனையடுத்து போலி போலீசார் இருவரையும் கைது செய்த நிஜ போலீசார் போலியான பில்கள் மற்றும் அபராதம் வசூல் செய்த 5 ஆயிரம் ரூபாய் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கை பயன்படுத்தி போலியாக பில் தயாரித்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீசார் இருவர் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Covid-19, Crime | குற்றச் செய்திகள், Lockdown, Night Curfew