கஞ்சா பழக்கத்தை கைவிடாத மைத்துனரை கண்டித்த அக்கா கணவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை குடும்பத்தினரே பூட்டி வைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத்(29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கோகுல்நாத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அழகான குழந்தை இனிமையான வாழ்க்கை என்று குடும்பத்தாரோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த கோகுல்நாத்தை சொந்த மைத்துனர் பாலமுருகன் சுத்தியலால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இளம் வயதிலேயே மனைவியின் தம்பி பாலமுருகன் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானது குடும்பத்தினரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.பாலமுருகனின் செயலைக் கண்டித்து கஞ்சா போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோகுல்நாத் பலமுறை மைத்துனர் பாலமுருகனை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் இன்று அதிகாலை 5 மணியளவில் தூங்கி கொண்டிருந்தவரை சகோதரியின் கணவன் என்றும் பாராமல் சுத்தியலால் தாக்கி கோகுல்நாத்தை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா போதையிலிருந்த பாலமுருகனை உடனடியாக அவரது குடும்பத்தினர் பிடித்து வீட்டில் அடைத்து வைத்து பூட்டினர்.
இதனையடுத்து குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளப்பட்டி காவல் துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலமுருகனுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? கஞ்சா விற்பனையில் தொடர்புடைய கும்பல் எது? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்: திருமலை தமிழ்மணி (சேலம்)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.