தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்படுவதை முன்னிட்டு,
கன்னியாகுமரி மாவட்டம், காற்றாடி மலையில் தமிழக, கேரள மக்கள் சிறப்பு பிராத்தனை நடத்தினர். இந்நிலையில், ரோமில் புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற சிற்றூரில் 1712 ம் ஆண்டு பிறந்தவர் நீலகண்டபிள்ளை. இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றி வந்தார். அப்போது குளச்சல் போரில் டச்சு படை தளபதி டிலனாய் கைது செய்யப்பட்டு பின்னர் திருவிதாங்கூர் அரசின் தளபதியாக போர் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இவர் தக்கலை அருகே புலியூர்குறிச்சி யில் உள்ள அரண்மனையில் வீரர்களுக்கு போர் பயிற்சி, ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த போது, அங்கே பணியாற்றிய நீலகண்டபிள்ளைக்கும் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இயேசு கிறிஸ்துவினுடைய பாடுகள் அவரது வரலாறுகளை டிலனாயிடம் இருந்து கேட்டு தெரிந்த நீலகண்டபிள்ளை மனம் கவரப்பட்டார்.
இதை தொடர்ந்து, அன்றைய பாண்டிய நாட்டின் இடமான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் இருந்த தேவாலயத்தில் திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் பிள்ளை என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மதம் மாறியதால் அவர் பணியாற்றி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு அவரின் பணிகள் பறிக்கப்பட்டது. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் .
பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர், அதை பொருட்படுத்தாமல் இறைப் பணியை முன்னிலை படுத்தியதால் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைதட்டு பகுதியில் சிறைவைக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அதன் மூலம் மறைசாட்சியானர். அவருடைய உடலை மூன்று நாட்களுக்குப் பின்னர் எடுத்து வந்து நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
இவருக்கு ரோம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு லிட்டர் பால் ரூ.7 ஆயிரம்.. இனி கழுதை மேய்ப்பது அவமானம் அல்ல
மேலும், இந்தியாவில் இருந்து 1000 பேர் கலந்து கொள்வதாக ஏற்கெனவே கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் சூசை தெரிவித்திருந்தார். இந்த சூழலில், தேவசகாயம் பிள்ளை சித்திரவதை செய்யப்பட்ட காற்றாடிமலையில் தமிழக, கேரள மக்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ள நிலையில், வாட்டிகன் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.