கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் ரப்பர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க ரப்பர் தொழிலாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் ரப்பர் சாகுபடி நடந்து வருகிறது. ஆகவே மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் ரப்பரை ஒட்டியே இருந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 25,000 ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. ஆகவேதான் இங்கிருந்து உலகத்தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அரசு ரப்பர் கழகம் மூலம் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டு, உற்பத்தியும் நடந்து வருகிறது.
மேற்கு தொடர்சி மலையோரங்களான கீரிப்பாறை, காளிகேசம், குற்றியாறு, மணலோடை, கோதையாறு, சிற்றாறு, மயிலாறு டிவிஷன்களில் அரசு ரப்பர் கழகம் அதிகம் ரப்பர் பயிரிட்டுள்ளது. இந்த பகுதிகளில் தனியார் ரப்பர் தோட்டங்களும் உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் கடந்த 10 நாட்களாக ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் வேலை இழந்து தவித்து வருவதாகத் தெரிகிறது.
ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இதுபோன்று பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ரப்பர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பல ஆண்டுகள் முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குறை கூறினர். தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிகமாக ரப்பர் தொழில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari