நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்துக்காக நிலம் எடுப்பது குறித்தும் அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்தும் கடலூர் மாவட்டம் வடலூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியர், எம்எல்ஏ-க்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிலம் எடுப்புக்காக உயர்த்தப்பட்ட சரியீட்டுத் தொகை குறித்து விவரித்தார். ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு கொடுத்த உரிமையாளர்களுக்கு 72 லட்சம் வரை ஒட்டுமொத்த பணப்பலன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கையகப்படுத்தப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்துக்கு 15 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக சரியீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அடுத்த 4 ஆண்டுகளில் 500 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஆலோசனைக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால், நெய்வேலி-வடலூர் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக கூட்டத்தில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளிநடப்பு செய்தார். விவசாயிகள் தரப்பையும் அழைத்து மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.