அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கபட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சிவி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், தம்மை நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால் தமது நீக்கம் செல்லாது என கூறினார்.
இதையடுத்து, உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை நிராகரித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.