முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Ration Card | ரேஷன் கார்டுகளில் ஆண்கள் படத்துக்கு தடா..! - ஆக்‌ஷனில் இறங்கிய இல்லத்தரசிகள்

Ration Card | ரேஷன் கார்டுகளில் ஆண்கள் படத்துக்கு தடா..! - ஆக்‌ஷனில் இறங்கிய இல்லத்தரசிகள்

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

ஆண்கள் குடும்பத்தலைவர்களாக இருக்கக்கூடிய கார்டுகளில் இருந்து பெயர்கள் நீக்கிவிட்டு குடும்பத்தலைவிகளாக இல்லத்தரசிகளின் பெயர்களை பதிவு செய்யத்தொடங்கிவிட்டனர்

  • 1-MIN READ
  • Last Updated :

ஒரே ஒரு தேர்தல் வாக்குறுதிதான்.. ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்பத்தலைவர்களின் போட்டோ எல்லாம் மாயமாகிவிட்டது. குடும்பத் தலைவிகளாக தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு பெண்கள் தயாராகிவிட்டனர். மக்கள் கூட்டம் அலைமோதும் ரேஷன் கடைகள் கூட இப்போது காற்று வாங்குகின்றன. பெண்கள் கூட்டம் தாலுக்கா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் குவியத் தொடங்கிவிட்டனர். ரேஷன் கடை வாசலை மிதிக்காத சில பெண்கள் கூட இ-சேவை மையங்களில் காத்து கிடக்கின்றனர். இசேவை மைய ஊழியர்கள்தான் இப்போது இம்சைக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் சில சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சி அமைந்ததில் இருந்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றியும் வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் இதுவரை எந்த அரசாணையும் வெளியாகவில்லை. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துக்கொள்ளும் கூட்டத்தில் செய்தியாளர்கள் குடும்பத்தலைவிகளுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை குறித்து கேள்வி எழுப்பினால் விரைவில் அரசாணை வெளியாகும் என சொல்லிவிட்டு செல்வார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசாணை வெளியாகிறதோ இல்லையோ இங்கு குடும்பத்தலைவர்களின் புகைப்படங்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து வெளியேறிவிட்டது. ஆண்கள் குடும்பத்தலைவர்களாக இருக்கக்கூடிய கார்டுகளில் இருந்து பெயர்கள் நீக்கிவிட்டு குடும்பத்தலைவிகளாக இல்லத்தரசிகளின் பெயர்களை பதிவு செய்யத்தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் ரேஷன் கார்டுகளில் குடும்பத்தலைவிகளை கொண்ட கார்டுகளுக்கே உதவித்தொகை வழங்கப்படும் என பரவும் வதந்திதான். நாளுக்கு நாள் டிசைன் டிசைனாக பரவும் வதந்தியால் குடும்பத்தலைவிகள் இசேவை மையம் நோக்கி படையெடுக்கத்தொடங்கிவிட்டனர்.

இப்படி சிலர் பெயர் மாற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் ரேஷன் அட்டைக்கு பதிவு செய்யும் இணையத்தளமே கடந்த சில நாள்களுக்கு முன்பு முடங்கியது. தற்போதுதான் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், குடும்ப உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கும் பணிகளில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த சிலருக்கு தேர்தல் பணிகளால் காலதாமதமானது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக விசாரணை அதிகாரி சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்க இயலாததால் ரேஷன் கார்டு பணிகள் முடங்கியிருந்தது. இப்போதுதான் இந்தப்பணிகள் எல்லாம் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இதிலும் சில புதிய விண்ணப்பங்கள் சரியான ஆவணங்களை வைக்காத காரணத்தால் நிராகரிப்படுகிறது. அரசு அலுவலகங்களில் குவிந்துள்ள இல்லத்தரசிகளால் நிராகரிப்புக்கான காரணங்களை கூட விசாரணை அதிகாரிகளை சந்தித்து கேட்க முடியாத சூழல் நிலவுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: E Service, Ration card, Ration Goods, Ration Shop