ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தேவாலயத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் இரட்டைக் கொலை செய்த முதியவர், அவரது சகோதரி உள்ளிட்ட 5 பேருக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் வேதமாணிக்கம்(75). இவரது தங்கையின் கணவர் வேதமணி(65). இவர்கள் இருதரப்பினருக்கும் இடையே கிராம நிர்வாகிகள் தேர்வு செய்வது, தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனையடுத்து தேவாலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வேதமணி தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
தீர்ப்பு வந்ததை தொடர்ந்து கடந்த 26.5.2015 அன்று வேதமாணிக்கம் தரப்பினர் தேவாலயத்தை ஆக்கிரமிப்பு செய்யச் சென்றுள்ளனர். அப்போது அதை தடுக்க வேதமணி, அவரது தம்பி ஆசிர்வாதம்(58), வேதமணியின் தங்கையும், தூத்துக்குடி தருவைக்குளத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜின் மனைவியுமான கன்னிமரியாள்(42) ஆகியோர் சென்றனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வேதமாணிக்கம் தரப்பினர் அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி வேதமணி மற்றும் ஆசிர்வாதத்தை கொலை செய்தனர். இதில் கன்னிமரியாளும் படுகாயமடைந்தார்.
இதுதொடர்பாக கன்னிமரியாள் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸார், வேதமாணிக்கம், இவரது மகன் ஜோசப்ராஜா(51), வேதமாணிக்கத்தின் சகோதரர்கள் பால்மனோகரன்(69), குணசேகரன்(58), பொன்னையா நாடார் மகன் ராஜமுத்து(43), வேதமாணிக்கத்தின் சகோதரியும், கொலை செய்யப்பட்ட வேதமணியின் மனைவியுமான பூவம்மாள்(67) ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
ALSO READ | 'உடலில் எங்கு தொட்டாலும் வலி '.. வினோத நோயால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி - உதவிக்காக தவிப்பு
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது 2 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகரன் இறந்துவிட்டார். நேற்று நடந்த இறுதி விசாரணையில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, தங்கையின் கணவரை வெட்டிக்கொலை செய்த வேதமாணிக்கம், பால்மனோகரன் மற்றும் ஜோசப்ராஜா, ராஜமுத்து, பூவம்மாள் ஆகிய 5 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் வேதமாணிக்கம், பால்மனோகரன், ஜோசப்ராஜா, ராஜமுத்து ஆகியோருக்கு தலா ரூ. 10,000 அபராதமும், பூவம்மாளுக்கு ரூ. 15,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : பொ. வீரக்குமரன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.