குடியரசுத் தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உருவாக்கப்பட்ட ஊர்திக்கு இந்த நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதியுள்ள கடிதத்தில், குடியரசுத் தினவிழாவில் பங்கேற்கும் ஊர்திகளை தேர்வு செய்வதில் தலைசிறந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள்/ துறைகளிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைகளை கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பக்கலை, இசை, கட்டிடக்கலை, நடனத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய நிபுணர் குழு பரிசீலனை செய்கிறது.
மேலும் படிக்க: அண்ணாமலை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாஜக கொடி சேதம்: காரில் வந்தவர்களால் பரபரப்பு
கருபொருள், கருத்து, வடிவமைப்பு மற்றும் காட்சி தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊர்திகளை நிபுணர் குழு தேர்வு செய்கிறது. 2022ம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பிற்கு 29 பரிந்துரைகள் வரபெற்றன. இதில், தமிழகத்தின் ஊர்தி முதல் மூன்று சுற்று சந்திப்புகளில் இடம்பெற்றது. அதன் பின்னர், தமிழகத்தின் ஊர்தியால் இறுதி பட்டியலுக்கு தேர்வாக முடியவில்லை. கடந்த 2017,2019, 2020,2021 ஆகிய ஆண்டுகளில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்தி பங்கேற்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.