முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட் - கட்சி தலைமையிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன...?

மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட் - கட்சி தலைமையிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன...?

பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் சச்சின் பைலட்

பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் சச்சின் பைலட்

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இதன்மூலம், ஒரு மாதமாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேருடன் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விடுதியில் தங்கினார்.

இதன் காரணமாக, துணை முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அசோக் கெலாட் அரசு கவிழும் சூழல் இருந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் நேற்று சந்தித்துப் பேசினார்.

ராகுல் காந்தியின் இல்லத்தில் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பிரியங்கா காந்தி உள்ளி்ட்டோரும் உடனிருந்தனர். அப்போது, எதிர்கால முதல்வர் என்று தன்னை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை சச்சின் பைலட் வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக பணியாற்றுவதாக சச்சின் பைலட் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.

சச்சின் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க கட்சித் தலைவர் சோனியாகாந்தி முடிவுசெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தி, வேணுகோபால், அகமது படேல் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், காங்கிரஸ் தலைமையிடம் தங்களது குறைகளை தெரிவித்ததாகவும், உரிய நேரத்தில் தீர்வுகாணப்படும் என்று தலைமை உறுதியளித்ததாகவும் கூறினார். எந்தவொரு பதவியையும் தான் எதிர்பார்க்கவில்லை என்றும், தனக்கு எதிராக தனிப்பட்ட முறையிலான கருத்துக்களுக்கே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் சச்சின் பைலட் கருத்து தெரிவித்தார்.

ராகுல் காந்தியுடனான சச்சின் பைலட்டின் சந்திப்பைத் தொடர்ந்து, ஒரு மாதமாக நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சச்சின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் ராஜஸ்தான் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரியானாவிலிருந்து திரும்பிய அதிருப்தி எம்எல்ஏ பன்வர் லால் சர்மா, ஜெய்ப்பூரில் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். 200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 107 உறுப்பினர்களின் ஆதரவுடன் அசோக் கெலாட் பதவியில் நீடிக்க உள்ளார்.

தற்போதைய நிலையில் முதலமைச்சர் மாற்றப்பட மாட்டார் என்றும், மாநில தலைவர் பதவி சச்சின் பைலட்டுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

First published:

Tags: Rajasthan, Sachin pilot