தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏற்கெனவே, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் தலைமைகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்கு ராகுல் காந்தி, ஜே.பி.நட்டா ஆகியோர் வருகை தந்தனர். இந்தநிலையில், தமிழகத்தில் வாங்க.. ஒரு கை பார்ப்போம் என்ற பெயரில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் பயணமாக கோவை வந்துள்ள அவர், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்காரணமாக இன்று விமானம் வழியாக கோயம்புத்தூர் வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி, ‘உற்சாக வரவேற்பு நன்றி. இங்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஆனால் தமிழகம் துர்திஷ்டவசமாக அதன் பெருமையை இழந்து வருகிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள்; விவசாயிகள் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள்.
நீங்கள் விரும்பும் அரசை கொண்டு வரத்தான், அதற்கு உதவத்தான் தமிழகம் வந்துள்ளேன். நான் இங்கு எந்த சுயநலத்திற்காகவும் வரவில்லை. உங்களை விரும்புவதால் வந்துள்ளேன். உங்களுக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவு நேர்மையான உறவு’ என்று தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்