சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகளிடம் இன்று கலந்துரையாடிய ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, காஷ்மீர் விவகாரம், பொருளாதாரம் என்று பல்வேறு விவகாரங்களில் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். முதலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகளின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, காஷ்மீர் விவகாரம், பொருளாதாரம் என்று பல்வேறு விவகாரங்களில் மாணவிகளின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். கலந்துரையாடல் தொடங்கும் போதே தன்னை சார் என்று ஒரு மாணவி அழைக்க, “சார் வேண்டாம்... ராகுல் என்றே அழையுங்கள்” என்று அவர் கூறினார்.
“கல்வி நிலையங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென்னிந்தியா சிறந்து விளங்குகிறது. தென்னிந்தியாவில் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது.
பெண்கள் இரண்டாம் நிலை அல்ல, அவர்களை சம நிலையாக கருத வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசின் வேலை வாய்ப்பில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும். மிகவும் சிக்கலான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி எளிமையாக மாற்றப்படும். நான்கு நிலையிலான வரிகள் நீக்கப்படும்” என்று அவர் கூறினார்.
ராபர்ட் வதேரா பற்றி ஒரு மாணவி கேள்வி எழுப்ப, “ராபர்ட் வதேரா குறித்தும் பதிலளிக்க தயராகவே இருக்கிறேன். ஆனால், அதற்கு முன்னதாக பிரதமர் மோடியிடம் பல கேள்விகள் உள்ளன.
அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மக்களின் பணத்தை வங்கிகளில் பெற்றனர். அனில் அம்பானி ஒரு போதும் விமானம் தயாரித்தது இல்லை. அவரது நிறுவனத்துக்கு ரஃபேல் தயாரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்கில் ரூ.35000 கோடி கடன் வாங்கிய நிரவ் மோடி இதுவரை எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார்? இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இது குறித்த விசாரணை நடுநிலையாக நடத்தப்படவில்லை. பிரதமர் மோடி ரஃபேல் விவகாரத்தில் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்” என்றார்.
தாய் சோனியாவிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன என்ற கேள்விக்கு, “எனது தாயிடம் இருந்து மரியாதையை கற்றுக் கொண்டேன்” என்றார். “மோடிக்கு ரபேல் பற்றி விளக்கம் அளிக்க ஒரு நிமிடம் போதும். ஆனால் பேச மறுக்கிறார். என்னிடம் கேள்விகள் கேட்கப்படுவதை போல், மோடியிடமும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று அவர் கூறினார்.
காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இது அவர்களை வேறு பாதைக்கு கொண்டு செல்வதை தடுக்கும் என்று பேசினார். கலந்துரையாடலின் இறுதியில் அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
Also See....
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency