தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் 2-ஆம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த மருத்துவ கல்லூரிகளிலேயே, அங்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ உதவியுடன் உடலின் வெப்பநிலை சோதனை செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முதல் நாள் மாணவர்களின் வருகைக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதால், அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் மூலம் மாணவர்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்தல், சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்று எண்ணி அலட்சியம் கொள்ளாமல், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கான பாதுகாப்புடன் சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தடுப்பூசி விநியோகித்தல் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் தரவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்