புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் குடோன் வாசலில் நிறுத்தியிருந்த சரக்கு லாரியிலிருந்து மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாகோட்டை மதுபான ஆலையில் இருந்து சரக்கு லாரி (டாரஸ் லாரி) மூலம் மதுபான பெட்டிகளை ஏற்றி கொண்டு புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள டாஸ்மாக் குடோனில் மது பாட்டில்களை இறக்க அதன் வாசலில் லாரியை நிறுத்தி வைத்த நிலையில், யாரோ சில மர்ம நபர்கள் லாரியில் இருந்த மதுபான பெட்டிகளில் 1,74,720 ரூபாய் மதிப்பிலான 28 மதுபான பெட்டிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து டாஸ்மாக் குடோனில் மதுபான பெட்டிகளை இறக்கி வைக்கும்போது 28 பெட்டிகள் குறைந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த கல்லாகோட்டை மதுபான ஆலை மேலாளர் சீனிவாசன் இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் குடோனில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளதால் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு சிக்கல் நிலவி வருகிறது.
டாஸ்மாக் குடோன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு லாரியில் இருந்து மதுபான பெட்டிகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-செய்தியாளர்: ரியாஸ்
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.