சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அனுப்பியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு ரத்த சோகை இருப்பதாகவும், ரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதாகவும் மருத்துவர் கூறினார்.
அதனால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி சேர்க்கப்பட்டார். அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருத்துவர்கள், ரத்த வங்கி தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு தொழில்நுட்ப ஊழியர் வளர்மதி உட்பட 3 பேர் பணிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளதாக விருதுநகர் ஆட்சியர்(பொறுப்பு) உதயகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் தனது கணவருடன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனக்கு உரிய சிகிச்சையும், இழப்பீடும் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Also Watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.