விஜய் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்தது தான்தான் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தனிப்பட்ட முறையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்று சமீப நாட்களாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வந்தனர். இதையடுத்து தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார் என்ற தகவல் தீயாய் பரவ ஆரம்பித்த நிலையில், விஜய்யின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது இந்த தகவலை மறுத்துள்ளார்.
இதனிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பதை அரசியல் இயக்கமாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் இயக்க பதிவிற்கும் விஜய்க்கும் தொடர்பில்லை என்றும், தனிப்பட்ட முறையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்