சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கன
மழை பெய்து வருகிறது. அதனால், பலபகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், கனமழையுடன் இன்று காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது மதுபோதையில் இளைஞர் ஒருவர் மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார். ஆனால், அந்த இளைஞர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று எண்ணி, காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த இளைஞர் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில், சாலையோரம் விழுந்து கிடந்தவரை தூக்கிக்கொண்டு ஓடும் காவல் ஆய்வாளரின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.