இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா கோவையில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை பிரதீப் சிங் என மாற்றிக்கொண்டு உடற்பயிற்சி கூடங்களில் புரோட்டின் சப்ளை செய்யும் விற்பனையாளராக இருப்பதாகக் கூறி கொண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி கோவை காளப்பட்டி மஹாராஜா நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த வீட்டில் அங்கொடா லொக்காவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்தார். இச்சூழலில் மதுரையில் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மூலம் உடலை மதுரைக்குக் கொண்டு சென்று எரித்தனர். இந்நிலையில் அங்கொடா லொக்காவின் காதலி அம்மானி தான்ஞி, வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அங்கொட லொக்கா இறந்ததாகச் சொல்லப்பட்டாலும் இலங்கை காவல் துறையினர் இன்னும் அதை ஏற்கவில்லை. இறந்தது அங்கொடா லொக்காதான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அவரின் உடலை எரித்துவிட்ட நிலையில் இதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அங்கொட லொக்காவின் காதலி அம்மானி தான்ஜியிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது செல்போனில் இருந்து அங்கொட லொக்கா இறந்தபோது எடுத்த புகைப்படங்கள், பிரேதப் பரிசோதனை செய்த பின்னர் எடுத்த புகைபடங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றை சிபிசிஐடி கைபற்றியுள்ளனர்.
Also read: திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதா என விசாரணை - காவல்துறை
இறந்தது அங்கொட லொக்கா தானா என்ற சந்தேகத்தை இலங்கை ஊடகங்கள், இலங்கை போலீசார் எழுப்பி வரும் நிலையில், இறந்த நிலையில் அங்கொட லொக்கா இருக்கும் புகைபடம் சிக்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும், பிரேதப் பரிசோதனைக்காக அங்கொட லொக்காவின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட உறுப்புகள் மூலம் டி.என்.ஏ சோதனை செய்ய முடியும் என்பதால், அதற்கான முயற்சிகளையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
டி.என்.ஏ சோதனை நடத்துவதன் மூலம் இறந்தது அங்கொடா லொக்கா என்பதை அறிவியல் பூர்வமாக நிருபணம் செய்ய முடியும் என்பதால் அதற்கான வேலைகளை சிபிசிஐடி போலீசார் செய்து வருகின்றனர்.
இதனிடையே தனிப்படை போலீசார் அங்கொடா லொக்காவின் போலி ஆதார் அட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை முகவரியில் இருக்கும் ஆதார் அட்டை எப்படி போலியாக தயாரிக்கப்பட்டது என்பது குறித்தும் இதற்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Smuggling