நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில்,
சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில்
திமுக-வினர் சிலர் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக
அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். ஜெயக்குமார் முன்னிலையிலேயே அவரை சிலர் தாக்க தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டும்படியும் கூறி ஜெயக்குமார் தடுத்தார். பின்னர், அந்த நபரிடம் சட்டையை கழட்டும்படி கடுமையாக ஜெயக்குமார் கூறினார்.
இதை தொடர்ந்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு அவரது கைகளும் கட்டப்பட்டன. பின்னர், சட்டை இல்லாமல், அவர் அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ‘வேற வார்டை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை என்றும், திமுகவைச் சேர்ந்த நீ எத்தனை கள்ள வாக்குகளை போட்டாய்’ என்றும் அவரிடம் ஜெயக்குமார் கேள்வி கேட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கால் மண்டபம் சாலை ஜி.ஏ ரோடு சந்திப்பில் சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ReElection: அசம்பாவித சம்பவங்கள் நடந்த 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அவரது ஆதரவாளர்கள் 95 ஆண், 15 பெண்கள் என 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்றதில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.