கடலூர் மாவட்டம் எம்.பட்டிக்குடிகாடு என்ற கிராமத்தில் கூலிங்கிளாஸ் அணிந்து சென்றதற்காக இளைஞர் ஒருவரையும் , அவரது தாயையும் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்.பட்டிக்குடிகாடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அழகேசன் என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று கூலிங் கிளாஸ் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.
அப்போது அவரை மற்றொரு சமூகத்தை சேர்ந்த சத்யராஜ், பழனிச்சாமி, கோபி, வெங்கடேசன் ஆகிய 4 பேரும் மறித்திருக்கின்றனர். தங்கள் பகுதிக்குள் கண்ணாடி அணிந்து செல்லக்கூடாது எனக் கூறியதோடு, இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி தள்ளிச்செல்லுமாறும் கூறி தாக்கியிருக்கின்றனர்.
இதனை தட்டிக்கேட்ட அழகேசனின் தாய் அன்னக்கிளியையும் அந்த நான்கு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அழகேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் மக்கள் சுமார் 200 பேர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற ஆட்சியர் அன்புச்செல்வன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனை அடுத்து தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள கோபி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அடிப்படை தேவைகளான ரேசன் கடை, பேருந்து நிலையம் என அனைத்து தேவைகளுக்கும் மாற்று சமூகத்தினரின் பகுதிக்கே செல்ல வேண்டி உள்ளதால் சாதிப் பிரச்சனை தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.