முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 75. குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகள் சுபாஷினி யாதவ் ட்விட்டரில் அறிவித்தார்.
அவரது மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்தார். சரத் யாதவ் எமர்ஜென்ஸி காலத்தில் பொதுவாழ்வுக்கு வந்தவர் என்பதும், இவர் 7 முறை மக்களவை உறுப்பினராகவும், 3 முறை மாநிலங்களை உறுப்பினராகவும் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவு சமூகநீதிக்கு மிகப்பெரிய இழப்பு என பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் சரத்யாதவ் ஆவார். 50 ஆண்டுகளுக்கும் கூடுதலான அரசியல் அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சியை எதிர்க்க பலரும் அஞ்சிய காலத்தில் ஜே.பி. என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து அரசியல் செய்தவர். ஜே.பி. இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வேட்பாளர், 1981-ஆம் ஆண்டு அமேதி தொகுதி இடைத்தேர்தலில் ராஜீவ்காந்தி முதன்முறையாக போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்டவர் என்பன உள்ளிட்ட பல பெருமைகள் சரத்யாதவுக்கு உண்டு. சரண்சிங், வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற தலைவர்.
அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே சமூகநீதியில் அக்கறை கொண்டவர். நாடு தழுவிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தவர். இதற்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட சமூகநீதி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள், மாநாடுகளில் கலந்து கொண்டவர். 2000-ஆவது ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க முன்மொழிந்த தேசியத் தலைவர்களில் சரத் யாதவும் ஒருவர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை அவர் மிகவும் நேசித்தார். என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். சரத்யாதவின் மறைவு சமூகநீதிக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கை வாயிலாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Dr Ramadoss, RJD