வேலூர் அருகே ஆதி திராவிடர்களுக்கு தனி மயானத்தை அமைத்து கொடுத்திருப்பது சாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த குப்பன் என்பவரது சடலத்தை விளைநிலம் வழியாக எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பாலத்தில் இருந்து தொட்டில்கட்டி சடலம் இறக்கப்பட்டு மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் முறையிட்டார். இதனை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வேலூர் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கென தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலகங்களோ, காவல்நிலையங்களோ இல்லாத நிலையில், அவர்களுக்கு தனி மயானத்தை அரசே அமைத்து கொடுப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பதைப் போல் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
தெருக்களில் இருந்து சாதி பெயர்களை நீக்க வேண்டுமென அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பள்ளிகளுக்கு ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பினர். மேலும், குப்பன் சடலத்தை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் டொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாளுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.