பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே காணாமல் போன பெண், 15 நாட்களுக்கு பிறகு, வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகேயுள்ள அ.மேட்டூர், காந்தி நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி புஷ்பா(43). கடந்த 7-ம் தேதி தேதி காலையில் அரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், புஷ்பாவின் அம்மா பெருமாயி(64) கடந்த 9-ஆம் தேதி அரும்பாவூர் காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் புஷ்பாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் அன்னமங்கலம் வனப்பகுதியில், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக ஆடுமேய்க்க சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த சடலம் காணாமல் போன புஷ்பாவாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், அவரது உறவினர்களை நேரில் வரவழைத்து அடையாளம் காட்ட செய்தனர்.
புஷ்பா அணிந்திருந்த உடைகள் மற்றும் அங்க அடையாளங்களை கொண்டு இறந்து சடலமாக கிடப்பவர் புஷ்பாதான் என்பது உறுதியானது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அரும்பாவூர் சென்ற புஷ்பா ஏன் அன்னமங்கலம் வனப்பகுதிக்கு வந்தார். அவரை யாராவது அழைத்து வந்து, வங்கியில் செலுத்த எடுத்து வந்த ரொக்கப் பணம் ரூ.32 ஆயிரத்தை அபகரித்துக்கொண்டு, கொலை செய்து விட்டு சென்றார்களா இல்லை அவர் இறப்பிற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.