ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மாநகர் மாவட்ட செயலாளராக முருகானந்தம் ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்னை காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றோர் அணியும் பிரிந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு அணியினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் மீண்டும் ஒரு பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழுவினர் வாக்குகளை வைத்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஓபிஎஸ் அணிக்கு பொதுக்குழுவினர் ஆதரவு குறைவாக இருப்பதால் அதிமுக சார்பாக தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட படிவத்தை தேர்தல் ஆணையத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தாக்கல் செய்ததை அடுத்து தென்னரசுவை வேட்பாளராக தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டது.
மேலும் ஓபிஎஸ் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் வாங்கினார். இதனால் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் டி. முருகானந்தம் தலைமையில், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏ.எல். தங்கராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் சிவமுருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ். ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆர். அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளனர்.
சேலத்தி நெடுஞ்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி. முருகானந்தம், ஈரோடு கிழக்கு தொகுதி ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தும் போது மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த என்னிடம் எந்தவித முன்னறிவிப்புமின்றி வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்தனர் என்றும் மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் வேட்பாளரை அறிவித்தது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்றும் மேலும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி மீட்டெடுத்துள்ளார். எனவே ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டோம். ஓபிஎஸ் அணியில் இருக்கும் அனைவரும் விரைவில் அதிமுகவிற்கு வருவார்கள் என்று முருகானந்தம் தெரிவித்தார்.
செய்தியாளர்: திருமலை தமிழ்மணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Erode East Constituency, OPS - EPS