இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 ஆயிரம் டன் அரிசி மற்றும் 137 வகை மருந்துகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். இதை வழிமொழிந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி
நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் 2009-ல் ஈழமக்கள் அழித்தொழிக்கப்பட்ட போது உலகமே அதை வேடிக்கை பார்த்த சூழலில் அங்கே உள்ள மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை உலகத்தின் பார்வைக்கு யாராலும் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
அப்படியான சூழலில் கலைஞர் அவர்கள் தமிழகத்திலிருந்து நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அங்கு இருக்கும் சூழலை அறிந்து வெளியுலகத்தில் சொல்லுங்கள் என அனுப்பி வைத்தார் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்மக்கள் மட்டுமில்லை, யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக உதவுவோம் என இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்கான அறிவித்திருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார வரவேற்கிறது.
அங்கே அனுப்புவது அரிசி மருந்து மட்டுமில்லை, மனித நேயத்தையும் பன்முகத்தன்மையையும் என்பதை இந்த திராவிட மாடல் ஆட்சி உணர்த்துகிறது. இந்த நிலைக்கு அந்த நாடு ஆனதற்கு காரணமே மனிதநேயத்தையும் பன்முகத் தன்மையும் இழந்து நிற்பது தான். தமிழகத்தில் எல்லா மக்களும் இணக்கத்தோடு அமைதியோடு வாழ்கிறோம். அந்த அடிப்படையில் இந்த தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறோம்.
தமிழக அரசு இந்தியாவிற்கு ரோல்மாடல் அரசாக திகழ்ந்து வருகிறது.
Also Read :
இலங்கைக்கு உதவ என் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதி அளிக்கிறேன் - சட்டசபையில் ஓபிஎஸ் அறிவிப்பு
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களில் அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தமிழ் மக்கள். எனவே தமிழக அரசின் இந்த உதவி அங்குள்ள தமிழ் மக்களுக்கு அதிகமாக போய் சேரவேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க முன் வருகிறோம். இதையே அரசின் அறிவிப்பாகவும் வெளியிட வேண்டுகிறோம் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.