செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நெல்வாய் பகுதியில் உள்ள ஏ.சி.டீ கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என்று அலுவலர்களும், முகவர்களும்
குற்றம்சாட்டிய நிலையில், அங்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதமானது. இதனால், முகவர்கள் வாக்கு எண்ணும் மேசையில் தலைவைத்து தூங்கிக் கெண்டிருந்தனர்.
இதேபோல வாக்கு எண்ணும் பல்வேறு மையங்களில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. மையத்திற்குள் வாக்கு எண்ணும் அலுவலர்கள் முதலில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்து முகவர்கள் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் முண்டியத்து வந்ததால் போலீசார் கட்டுபடுத்த முடியாமல் திணறினார்கள்.
இதனால் நுழைவு வாயில் இரும்பு கதவை போலீசாரும் முகவர்களும் அவரவர் பக்கம் இழுக்க பதற்றமானது. ஒரு கட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் போலீஸ் தடை மீறி காத்திருந்த ஒட்டுமொத்த முகவர்களும் முண்டியடித்து உள்ளே நுழைந்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதற்கட்ட தேர்தலில் 77. 43 சதவீத வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 78. 47 சதவீத வாக்குகளும் பதிவாகின. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 70.51 சதவீத வாக்குகள் பதிவாகின.
இரு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன . இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வண்ணங்கள் வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
Must Read : ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 முடிவுகள் நேரலை
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட குழு மற்றும் 74 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களை கைப்பற்றும் என்பதை அறிய அரசியல் கட்சியினரும் பொது மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.