சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட விவகாரத்தில்,
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா நேற்று (சனிக்கிழமை) நடந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டீன் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர்.இதனால் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். நடைமுறையில் இல்லாத இந்த உறுதி மொழி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் HIPPOCRATIC உறுதிமொழியே பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், HIPPOCRATIC உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டதாகவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - மே தின விடுமுறை... நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் இத்தனை கோடிக்கு மது விற்பனையா?
விதிமுறையை மீறி மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததற்கு, துறைரீதியாக விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க - தமிழகத்தில் 99% மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு விதி மீறல்... ஆய்வுக்குழு அதிர்ச்சி தகவல்
அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் இனி வரும் காலங்கிளல் அனைத்து துறை தலைவர்களும் இப்போகிரேடிக் உறுதிமொழியை கடைவிடிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்லூரி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.