திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் கம்பெனிக்கு வடமாநில இளைஞர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிக்கு, வேலைக்கு சேர்ந்த 15 நாட்களில் பிக்கப்வேன் மற்றும் 2 லட்ச ரூபாயை கொள்ளையடித்து ‘என்னை எந்த போலீசாரும் பிடிக்க முடியாது பீகாருக்கு செல்கிறேன் வாட்ஸ் அப்பில்’ வீடியோ அனுப்பிய இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் சுமார் 15 வருடங்களாக, ஏ.ஆர்.ஜி. என்டர்பிரைசஸ் சார்பில் கோபி என்பவர் நிச் மற்றும் டெல்டா என்கிற பெயர்களில் ஆர்.ஓ. குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கம்பெனியில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார். இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் எனும் 2 வாலிபர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி கோபிக்கு போன் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கோபி அவர்களை அழைத்து அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்க வசதி ஏற்படுத்தி உள்ளார்.
ஆனால், அந்த தொழிலாளர்கள் இதுவரை அடையாள அட்டை ஆதாரங்களையும் புகைப்படங்களையும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி காலை தண்ணீர் கம்பெனியில் இருந்த பிக்கப் வாகனம் மற்றும் இதர வாகனங்களில் இருந்த டீசல் 50 லிட்டர், ரொக்கப் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய். மற்றும், 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள் ஒரு சிலிண்டர், எல்.இ.டி. டிவி என அனைத்து பொருட்களையும் திருடிக் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வழக்கம் போல மறுநாள் காலை, வேலைக்கு வந்த ஊழியர்கள் கம்பெனியின் சாவி வெளியே வீசப்பட்டு இருந்ததை அறிந்து மேலாளர் கோபிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக கம்பெனிக்கு வந்த கோபி, திருடு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்து, நாட்றம்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில், நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை தேடி வந்த வடமாநில இளைஞர்கள் வாகனம் உட்பட சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Must Read : திருநெல்வேலி கல்குவாரி விபத்தால் பலரின் வாழ்க்கை நிர்மூலமான பரிதாபம்..
இந்நிலையில், முதலாளியான கோபிக்கு நிர்மல் வண்டி ஓட்ட, மஞ்சித் வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார். அதில், நான் பீகாரை நோக்கி செல்கிறேன். எந்த போலீசாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக கோபி செய்வதறியாமல் திகைத்து வருகிறார். மேலும், வடமாநில இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி என்னைப் போல யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கோபி கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர் - M.வெங்கடேசன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Crime News, Robbery, Theft, Thirupathur