நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பாதையில் முள்ளூர் என்னும் இடத்தில் ஒற்றை காட்டு யானை கடந்த சில மாதங்களாக சுற்றி திரிகிறது. யானை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறிவந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானையானது கோத்தகிரி சாலையை சுற்றி திரிந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அரசுப்பேருந்தை வழிமறித்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பொதுமக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.
ஒற்றை காட்டு யானை நேற்று மாலை கோத்தகிரி சாலைவழியே வந்த அரசு பேருந்தை வழிமறித்தது. யானை சாலையை மறித்து நின்றதால் ஓட்டுனர் பேருந்தை மேற்கொண்டு இயக்காமல் இருந்துள்ளார். இரவு நேரத்தில் யானை பேருந்தை மறித்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
நீண்ட நேரம் சாலையில் நின்றுக்கொண்டு இருந்த காட்டு யானை திடீரென அரசு பேருந்தை நோக்கி வந்தது. ஓட்டுநரின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியை தாக்கியதால் பயணிகள் பதட்டமடைந்தனர். பேருந்தில் இருந்த சில பயணிகள் யானை தாக்கும் காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சாலையில் ஒரு மணி நேரமாக அங்கும் இங்கும் சுற்றி திரிந்த யானையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வருட காலமாக முள்ளூர் பகுதியில் முகாமிட்டுள்ள இந்த ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் அல்லது அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சாலையில் சென்ற பேருந்தை ஒற்றை காட்டு யானை மறித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீண்ட நேரம் சாலையின் நடுவே சுற்றி திரிந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.