நீலகிரி மாவட்டம் கூடலூரில் வயதான மூதாட்டி வீடு உட்பட பல வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மின் கட்டணம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் சரியாக மின் கணக்கீடு செய்யாத கணக்கிட்டாளர் ரமேஷ் என்ற ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி மின் பகிர்மான பகுதிக்குட்பட்ட மாதமங்களம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வீடுகளில் புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந் நிலையில் இந்த மாதம் ஓட்டுவீட்டில் வசிக்கும் மூன்று பல்புகள் மட்டுமே உள்ள அந்த பகுதியை சேர்ந்த ஒரு தேவகி என்ற மூதாட்டிக்கு மின்கட்டணம் 25 ஆயிரத்து 71 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான குறுஞ்செய்தி மூதாட்டியின் அலைபேசிக்கு அனுப்பபட்டுள்ளது. அந்த மூதாட்டியின் மகன் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து, சேரம்பாடி மின்பகிர்மான அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் கடந்த 10 நாட்களாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் அதே பகுதியில் பத்தாயிரம் முதல் 15,000 வரை மின் கட்டணம் பலருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் மின் பகிர்மான அலுவலத்தில் புகார் அளித்து இருந்தனர். இதனையடுத்து கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, வீடுகளுக்கு நேரடியாக செல்லாமல் மின் கணக்கீட்டாளர் ரமேஷ் அவராக கணக்கீடு செய்து அனுப்பி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த தொகை முழுவதும் கட்டணமாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மூதாட்டி
Must Read : எங்களுக்குத் தெரியாது அமைச்சர் கிட்ட கேளுங்க.. அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகாரியின் அலட்சிய பதில் - வைரலாகும் ஆடியோ
இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஊழியர் தவறு செய்தது தெரியவந்த நிலையில், தவறு செய்த மின் கணக்கீட்டாளர் ரமேஷ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்திரவிட்டனர். மேலும் இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.