நாகை அருகே கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு நீதிகேட்டு, சாலை நடுவே சாமியானா பந்தல் அமைத்து இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த சுபாஷினி உயிர் இழப்புக்கு நீதி கேட்டு நாகை நாகூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது நாளாக உறவினர்கள் இளைஞர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தனியார் கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று நாகூரில் இளைஞர் அமைப்பினர் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து நாகூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை நடுவே சாமியானா பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது நாகூர் இன்ஸ்பெக்டர் சிவராமன் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் சாலையில் சாமியான பந்தல் அமைக்க கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது சில இளைஞர்கள் காவல்துறையினர் மீறி சாலையில் மேலுமொரு சாமியான பந்தலை அமைத்தனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து நாகூர் காவல் நிலையத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் நடு வழியில் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை கலைத்து அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
-செய்தியாளர்: பாலமுத்துமணி.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.