அந்தமானில் ஆளுநர் பொறுப்பு வாங்க அண்ணாமலை துடிப்பதாக காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் விருந்தினர் மாளிகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஹிந்தி தேசிய மொழிகளில் ஒன்று. 1932 முதல் ஹிந்தி தினிப்பை எதிர்த்து வருகிறோம். இயற்கை முறையில் விவசாயம் இந்தியாவில் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இலங்கையில் இயற்கை முறையில் விவசாயம் செய்த காரணத்தால்தான் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறார்கள்.
மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்கள்தான் தேவை, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தேவை இல்லை. மோடியை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாக, எதை பற்றியும் கவலைப்படாமல் தமிழக மக்களின் உரிமைகளை காக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அதிமுக சார்பாக வரி உயர்வு போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறது. வரி உயர்வு ஏன் என்பதை தமிழக அரசு சட்டப்பேரவையில் தெளிவாக விளக்கி இருக்கிறது. எடப்பாடி மற்றும் ஓபிஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஸ்டாலின் அளவிற்கு உயர்ந்து நிற்க முடியாது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கவர்னர்களின் செயல்பாடுகள் ரொம்ப மோசமாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்தவர் தமிழக கவர்னர். அரசியல் சாசனத்தின் படி நடக்க தெரியாமல், தான்தோன்றி தனமாக தமிழக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல் முருகனுக்கு பதவி கிடைத்தது போல தானும் பதவி பெறவே பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் திமுகவிற்கு எதிராக பேசி வருகிறார். அந்தமானில் கவர்னர் பொறுப்பு வாங்க அண்ணாமலை துடிக்கிறார். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை. அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள் அங்கே இவரும் ஒரு சித்தராக இருக்கலாம்.
Must Read : திருப்பூரில் பீஸ்ட் படத்தைக் காண ஊழியர்களுக்கு டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த பின்னலாடை நிறுவனம்
தமிழக அரசியலை புரட்டி விடலாம் என அண்ணாமலை பேசி வருகிறார். 150 ஆண்டுகால அரசியலை பின்பற்றுகின்ற மாநிலம் தமிழகம். இங்கே குஜராத், உத்திர பிரதேசத்தை போல மடத்தனமாக மக்கள் இல்லை, விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். அண்ணாமலையின் சத்தங்களுக்கு செவி சாய்த்து விரைவில் மோடி ஒரு அரசாங்க பதவியை கொடுப்பார்.திமுக அதிமுகவிற்கு அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ்தான், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக அகில இந்திய கட்சி அல்ல, மாவட்ட கட்சிதான் என்றும் கூறினார்.
செய்தியாயளர் - பாலமுத்துமணி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.