சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த 7ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பதம் லால் கிருஷ்ணா, அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்தனர். இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். குற்றவாளிகளிடமிருந்து ஆயிரத்து 127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கொலையாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான பகீர் காரணத்தை தெரிவித்திருந்தனர். உயிரிழந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் 40 கோடி ரூபாய் பூர்வீக சொத்தை விற்றதாக காரில் செல்லும் போது பேசியுள்ளார். அதன் பிறகு அவர் அமெரிக்கா சென்று விட்டார். 40 கோடி ரூபாய் பணம் மயிலாப்பூர் வீட்டில் இருப்பதாக நம்பிய ஒட்டுநர் கிருஷ்ணா கொலைத் திட்டத்தை தீட்டி காத்திருந்தார். அமெரிக்காவிலிருந்து வந்ததும், தம்பதி இருவரையும் நண்பன் ரவிராயுடன் சேர்ந்து கொலை செய்து சூளேரிக்காட்டில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் ஏற்கெனவே தொண்டி வைக்கப்பட்ட குழியில் புதைத்துள்ளனர்
பின்னர் வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் விசாரணையை விரிவு படுத்திய போலீசார் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஸ்ரீகாந்தின் மகன் சஸ்வத்திடம் விசாரித்தனர். விசாரணையில், தனது தந்தை 40 கோடி ரூபாய் சொத்து விற்கப்பட்டது குறித்து தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என கூறியுள்ளார். அவர் 40 கோடி ரூபாய் ஆடிட்டிங் குறித்து காரில் பேசியிருக்கலாம் என்றும், அதை கிருஷ்ணா தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
Also Read :
ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு.. காரணம் கனமழை
தந்தை வீட்டில் சில லட்சங்கள் மட்டுமே எப்போதும் வைத்திருப்பார் எனவும் பாக்கெட்டில் செலவுக்காக 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை மட்டுமே வைத்திருப்பார் என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த கொலைச் சம்பவத்திற்கு பின்னணியில் 40 கோடி ரூபாய் காரணமாக இருப்பது என்பது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனிடையே, கொலை சம்பவத்தில் பதம்லால் கிருஷ்ணாவின் தந்தையும், பண்ணை வீட்டின் பாதுகாவலரான லால் சர்மாவுக்கும் சம்பந்தம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். வேறு யாருக்கேனும் சம்பந்தம் உள்ளதா? என விசாரணையை விரிவு படுத்தியுள்ள போலீசார், கிருஷ்ணாவின் தங்கை, தங்கை கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டைக் கொலை வழக்கில் பல பகீர் தகவல்கள் வெளி வரும் நிலையில், முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் தவறான புரிதலே படுகொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.