ஓசூர் அருகே உணவு வழங்கிய ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாத குரங்கு ஒன்று அவரது மேலேறி அவரை விடாமல் சுற்றி வருகிறது. இதனால் அவர் சவாரிகளுக்கு செல்ல முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக தவித்து வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை தேவரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரவி (42). இவர் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தனக்கு சொந்தமான ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று பகல் நேரத்தில் இவர் ஆட்டோ ஸ்டாண்டில் நின்றபோது இவரது ஆட்டோவில் ஒரு குரங்கு ஏறியுள்ளது.
சிவராத்திரியன்று குரங்கு ஆட்டோவில் ஏறியதால் பரிதாபப்பட்ட ரவி அங்குள்ள கடைக்கு சென்று பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதற்கு கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். உணவு பொருள்களை பசியாற உண்ட குரங்கு ஆட்டோவிலே அமர்ந்து கொண்டது.
பின்னர் ரவி சவாரி செல்லும் நேரத்தில் அந்த குரங்கை விரட்டியுள்ளார். ஆனால் குரங்கு ஆட்டோவிலிருந்து இறங்கி ஓட்டுநர் சீட்டில் இருந்த ரவியின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டது.
ஆட்டோவை விட்டு போக மாட்டேன் என அடம் பிடித்த குரங்குடன்தான் நேற்று முழுவதும் ரவி தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பொதுமக்களுடன் சவாரிக்கு சென்று வந்துள்ளார்.
கார்த்தி சிதம்பரத்துக்கு பத்தாண்டுகள் செல்லக்கூடிய பாஸ்போர்ட் வழங்கவேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
நேற்று இரவு வீட்டுக்கு சென்றபோது ஆட்டோவுடன் வீட்டுக்கு சென்ற குரங்கு இவர் வீட்டுக்குள் நுழைந்ததும் ஆட்டோவில் ஏறி படுத்து உறங்கி கொண்டது. காலையில் அவர் எழுந்து ஆட்டோவுடன் ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்றபோது குரங்கும் ஆட்டோவில் அமர்ந்து ஸ்டாண்டுக்கு சென்றுள்ளது.
இதனால் கடும் அவதியடைந்த ரவி இன்று ஆட்டோவில் இருந்த குரங்கோடு தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்திற்கு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் நடந்த விபரங்களை கூறி அந்த குரங்கை ஒப்படைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து சென்றதும் அந்த குரங்கு வனத்துறை அதிகாரிகளின் கைகளில் இருந்து தப்பி ஓடி மீண்டும் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்த ரவியின் ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்றுள்ளது.
ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் முடிவு செய்யட்டும்: அதன்பிறகு பதில்சொல்கிறேன்- டி.டி.வி.தினகரன் விளக்கம்
ரவி எங்கே உள்ளார் என தேடி அலையும் குரங்கின் செயல் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இதனிடையே குரங்கால் சவாரி கிடைக்காமல் கடும் அவதியடைந்து ஆட்டோ ஒட்டுநர் ரவி, ஆட்டோ ஸ்டாண்ட் வேண்டாம் என்று அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள மறைவான இடத்திற்கு சென்று போன் மூலம் பயணிகளை வரவழைத்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.
வனத்துறையினர் அந்த குரங்கை பிடித்து அடர்ந்த வனப்பகுதில் விட வேண்டும் என்பது ரவி மற்றும் அவரோடு பணியாற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒரு வேளை உணவு வழங்கியதற்காக ஆட்டோ ஓட்டுனரை பிரியாமல் அவரது தோல் மீது ஏறி அமர்ந்து ஆட்டோவில் சுற்றி வரும் குரங்கின் செயலை அப்பகுதியினர் வியர்த்து பார்த்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.