மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதையே போராடும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முவைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசை கண்டித்ததுடன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதிகள் குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பான, மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடுத்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்ற தடை விதித்த உத்தரவை நான் வரவேற்கிறேன். நாடு முழுவதும் போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி இது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.