கோவை மசக்காளிபாளையம் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது எனவும் மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைவில் முடித்து விமானநிலைய விரிவாக்கம் பணிகள் துவங்கும் எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகளை விட இந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பான பணிகள் நடத்தப்பட இருக்கின்றது எனவும் தெரிவித்தார். மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் என்பதில் அதிமுக, பி.ஜே.பி கட்சியினர் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர் என குற்றம்சாட்டிய அவர், ஆதார் எண் இல்லை என்றாலும் இப்போது கட்டணம் செலுத்தலாம் எனவும், ஆனால் மின்கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், மின் துறையில் சீர்திருத்தம் செய்ய ஆதார் இணைப்பு என்பது அவசியம் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சாலைகள் அமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுகவினரிடம் சாலைகள் இந்த ஒன்றரை வருடத்தில்தான் மோசமானதா என கேளுங்கள் என தெரிவித்தார். அவர்கள் போராட்டம் நடத்தும் போதாவது இதை கேளுங்கள் என தெரிவித்த அவர்,அதிமுக ஆட்சியில் போடாத சாலைகளை இந்த அரசு போடுகின்றது எனவும் தெரிவித்தார்.அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்தும் அவர்கள் கலந்து கொள்வதில்லை என விளக்கம் அளித்தார்.
சிறு குறு தொழில் முனைவோருக்கு கட்டணமாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் உத்தேசிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என கேட்டார்கள் எனவும்,அதற்காக 2500 கோடி ரூபாய் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார். த ற்போது 1.59 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் மின்வாரியம் குறைந்த அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளது எனவும்,கர்நாடகா போன்ற அருகாமை மாநில மின்கட்டணங்களை விட தமிழகத்தில் கட்டணம் குறைவு எனவும் தெரிவித்தார்.
நிலைகட்டணம், தாழ்வழுத்த பயனிட்டாளர்களுக்கு பீக் ஹவர் கட்டணம் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல , குறைத்து கொடுங்கள் என கேட்பதுதான் சரியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தொழில் முனைவோர் மின்வரியம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு ஆதரவை கொடுத்து முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மின்சார வாரியம் கடனில் இருக்கின்றது என தெரிவித்த அவர், தொழில் துறை தரப்பை மட்டும் பார்க்காமல் இரு தரப்பையும் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Senthil Balaji, TNEB, Udhayanidhi Stalin