பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், மது போதையில் ரகளை செய்வதற்கும் தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடை விதிக்ககோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க நிர்மல் குமாருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், நிர்மல் குமார் செந்தில் பாலாஜி மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்காமல் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதாக வாதிட்டார்.
தமிழகத்தில் கஞ்சா , குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்காக செந்தில் பாலாஜியை எப்படி குறை சொல்ல முடியும் எனவும், அவர் முதலமைச்சரோ அல்ல்து உள்துறை அமைச்சரோ அல்ல எனவும் அவர் வாதிட்டார். துறை சார்ந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம் எனவும், பள்ளி மாணவர்கள் மது அருந்துவதற்கும், மது போதையில் ரகளை செய்வதற்கும் எப்படி பொறுப்பேற்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது போன்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பில்லை என அமைச்சரான செந்தில் பாலாஜி எப்படி கூற முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். பின்னர், செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை மீண்டும் நாளை தள்ளி வைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.